சென்னை, கோடம்பாக்கம் புலியூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் மேம்பாட்டுக்காக நண்பர்கள் உதவியுடன் சில முயற்சிகளை கடந்த கல்வியாண்டில் தொடங்கினோம். மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அவர்களில் 7 பேர், நல்ல உள்ளங்களின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். சரஸ்வதி, சந்தியா ஆகிய மாணவியர் கோவூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.காம் பயில மூன்று ஆண்டுகளுக்கான செலவை நண்பர் திரு.பாலகணேஷ் ஏற்றுக் கொண்டார்.
மாணவர் ஜக்கிரியாவுக்கு சென்னை, சூளைமேடு இஸ்லாமிய அமைப்பு ஒன்று நியு காலேஜில் பி.சி.ஏ இடம் வாங்கிக் கொடுத்து, கல்லூரிக் கட்டணத்தையும் செலுத்தியது. மாணவர் கிருஷ்ணமுர்த்தி. ஆவடி அருகே உள்ள செயின்ட் மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர பல நண்பர்கள் சேர்ந்து 23,000 ருபாய் நிதியுதவி வழங்கினார்கள். இந்த மாணவருக்காக சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் 4.500 ரூபாய் வழங்கினார்கள். அந்தப் பள்ளியின் ஆசிரியை திருமதி. ஜெயந்தி அவரது பங்களிப்பாக 5,000 ரூபாய் வழங்கினார். மாணவர் தமிழரசன் கோடம்பாக்கம் சுந்தர்ராஜன் பொறியியல் கல்லூரியில் சேர 10,000 ரூபாயும் மாணவர் பாலமுருகன் சென்னை, சாலிக்கிராமம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் சேர, 5,000 ரூபாயும் சென்னை, நுங்கம்பாக்கம் எஸ்ரோ அரிமா சங்கம் உதவுயுடன் வழங்கப்பட்டது. மாணவர் மூர்த்தி, ஆவடி எஸ்.ஏ பொறியியல் கல்லூரியில் பயில, நண்பர் திரு.சுரேஷ் (கோவை) 20,000 ரூபாய் வழங்கினார். இந்த கல்வி உதவித் திட்டம் குறித்து அறிந்த மாணவி வர்ஷிணி(மேற்கு மாம்பலம்), தனது தந்தையிடம் சொல்லி 1,500 ரூபாய் வழங்க வைத்தார்.
உதவி என்று கேட்காமலேயே உதவிக் கரம் நீட்டிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அசாதாரண வள்ளல் மனம் கொண்ட இந்த மாணவியைப் போன்றோர்தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..செயின்ட் மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் திரு.மித்ராவிடம் மாணவர் கிருஷ்ணமூர்த்தியின் ஏழ்மை நிலையை எடுத்துச் சொன்னதும் கல்லூரிக் கட்டணத்தை பாதியாயக் குறைத்துக்கொண்டார். நிதியுதவி வழங்கிய அனைவருமே இதற்காக காத்துக்கொண்டிருந்தவர்கள் போல ஆர்வத்துடன் உதவினார்கள். கல்வி உதவித்திட்டத்திற்காக பலரையும் சந்தித்தபோது, ஏழை மாணவ,மாணவியரின் உயர்கல்விக்காக உதவுவதை ஏராளமான நல்ல உள்ளங்கள் ஓசைப்படாமல் ஓர் இயக்கமாக செயல்படுத்தி வருவதை உணர முடிந்தது.